புதினங்களின் சங்கமம்

கோட்டாபய அரசாங்கத்தின் மற்றுமொரு நாடகம்! எச்சரிக்கும் ஹிருணிகா!!

துறைமுகசேவைக்கு சீன அமைச்சரொருவரை எதிர்வரும் காலங்களில் நியமிக்கக் கூடிய நிலைமை கூட தோற்றம் பெறும் என்று ஹிருணிகா பிரேமசந்திர எச்சரித்துள்ளார்.

மேலும் சமகால அரசியல் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

தேசிய சொத்துக்களை வரலாற்றில் எந்த அரசாங்கத்திலும் இல்லாதளவிற்கு இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பகிரிந்தளித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆரம்பத்திலேயே குரல் கொடுக்கவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் துறைமுகசேவைக்கு சீன அமைச்சரொருவரை நியமிக்கக் கூடிய நிலைமை கூட தோற்றம் பெறும்.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பத்தில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டவர்கள் தான் இறுதியில் அதற்கு வாக்களித்தார்கள்.

எனவே இலங்கையின் தேசிய சொத்துக்கள் தொடர்பில் பற்றும் பொறுப்பும் இருந்தால் தொழிற்சங்கங்களை மாத்திரம் நம்புமாறு கோருகின்றோம். காரணம் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் தொழிற்சங்கள் கட்சி பேதமின்றி இணைந்துள்ளன.

அத்தோடு இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடக்குவதற்காகவே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு நாடகமாடுகின்றனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட ஜனாதிபதி அவர்களை அழைத்து எவ்வித கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை.

காரணம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்களின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பறிபோகக் கூடும். அவ்வாறு ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் தற்போது குரலை உயர்த்தியுள்ள அமைச்சர்களும் மௌனமாகி விடுவார்கள்.

மேலும் உண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒப்பிடும் போது மஹிந்த ராஜபக்ஷ சிறந்தவராவார். அதனால் தான் அவர்களுக்கிடையிலும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாக சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான எவ்வித சூழலும் இலங்கையில் இல்லை என்றார்.