போலிச் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை!
“சமூகவலைத்தளங்களில் போலிச் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகள் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான செய்திகள் நாட்டு மக்கள் மத்தியில் இன மற்றும் மத பேதங்களை தோற்றுவிப்பவையாகக் காணப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கத்தோலிக்க மக்கள் மத்தியிலே நம்பிக்கையை இல்லாமல் செய்யும் நோக்கத்திலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் செயற்பட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக போலிப் பிரசாரங்களை முன்வைத்து வரும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு 56 இலக்கத்தின் சிவில் மற்றும் அனைத்து இனக் கூட்டுறவுச் சட்டம் தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆவது சரத்து, 485 சரத்துகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை 2015ஆம் ஆண்டின் 8ஆவது இலக்கச் சட்டத்துக்கமைய சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிதாரிகள் பாதுகாப்புச் சட்டவிதிகளுக்கமையவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பில் இணையம் மற்றும் கணினி ஊடாகவும் பரிசீலனைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யாசகர் ஒருவரே வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். எனினும், இவ்வாறு மேலும் பலர் வைரஸ் காரணமாக உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் வீதியோரங்களில் இருந்து மீட்கப்பட்டன எனச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் 17 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இத்தகைய போலிச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், இது தொடர்பில் கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.
ரும் பதற்றம்!!

