வவுனியாவில் மலசலகூடத்திற்காக வெட்டிய குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு..!!
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மலசலகூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள வீட்டில் மழை காரணமாக நீர் உட்சென்றதால் வீட்டு கூரைக்கு தேவையான மரங்கள் வெட்டுவதற்காகத் தாயும், தந்தையும் வெளியில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மூன்று சிறுவர்கள் வீட்டிலிருந்துள்ளனர். இதன்போது வீட்டில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பி இருந்துள்ளது.விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் 6 வயது சிறுமியொருவர் நீர் நிரம்பிய குறித்த குழியில் தவறி விழுந்துள்ளார்.இதனையடுத்து குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், வவுனியா – பன்றிக்கெய்தகுளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.சிறுமியின் மரணம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

