புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை, கடற்றொழில் அமைச்சரிடம் கூறியும் பலனில்லை.

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரை திரும்பவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேவேளை கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், அவரிடம் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு உலங்குவானூர்தி (கெலிஹாப்டர்) உதவியை கேட்டுள்ளதாகவும், இதுவரையில் கடற்றொழில் அமைச்சர் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் அனைவரும் தாம் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி, அதிகாலையிலேயே மீனவர்களைத் தேடுவதற்குப் புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கினறனர்.

மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்டெடுக்க கடற்றொழில் அமைச்சு, நீரியல்வளத் திணைக்களம், கடற்படை என்பன தமக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.