புதினங்களின் சங்கமம்

வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும்.கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்!! (Photos)

வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின்ற ஒரு வகைத் தாவரச் செடிகள் இங்குள்ள குளத்தில் அதிகமாக வளர்ந்து நின்ற காரணத்தினால் ஒலுமடு என்ற காரணப் பெயரைப் பெற்றது இந்தக் கிராமம்.
எளிமையும் இயற்கை அழகும் நிறைந்திருக்கின்ற கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து வண்டில் பாதை வழியாக சுமார் நான்கு கிலோமீற்றர்கள் வனப்பகுதிக்குள் பயணப்படுகின்ற போது இயற்கை அரணென நிமிர்ந்து நிற்கின்ற வெடுக்குநாறி மலைத் தொடர் பகுதியின் ஆரம்பப் பகுதியைக் காணலாம்.
பெரும் கற்கள் உருண்டு திரண்டு காட்டின் பெரு மரங்களின் இடையே உருட்டி விடப்பட்டதைப்போல காட்சியளிக்கும் சிறு குன்றுப் பகுதிகளும், ஓங்கி வளர்ந்து நிற்கின்ற காட்டு மரங்களும் அவற்றின் கீழ் உள்ள சிறு புதர்களும் கொடிகளும் செடிகளுமாக அந்த வனமும் இணைந்த மலைக்குன்றுகளும் காட்டுகின்ற காட்சிகள் அற்புதமானவை.

காட்டின் மணத்தை நுகர்ந்துகொண்டும், காட்டின் ஒலியை செவிமடுத்துக் கொண்டும் நடந்து செல்ல வெடுக்குநாறி மலையின் முதற் பகுதியை காணலாம். மலையின் முன்னும் பின்னுமாக ஒரு வகை நாற்றம் கொண்ட மரங்கள் காணப்படுவதால் வெடுக்குநாறி மலை என்கின்ற காரணப்பெயரை இந்த மலை பெற்றுக்கொண்டதென அறிய முடிகிறது.
இந்தப்பகுதியில்தான் இந்த மலையின் இக்காலத்து சர்ச்சைக்குரிய தொல்லியல் எச்சங்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கின்றன. இங்குள்ள மலையின் முகப்புப் பகுதியில் புராதன பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அவ் எழுத்துக்கள் மழை மற்றும் வழிந்தோடும் நீரினால் அரிப்பிற்கு உள்ளாகாத வகையில் எழுத்துக்களின் மேற்பகுதியில் மலையைக் குடைந்து சிறு ஆழத்தில் நீரோட வழி செய்யப்பட்டிருக்கிறது. இங்கு வினாயகர், அம்மன், வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிலை வைத்து வழிபடுகின்றார்கள் கிராம மக்கள்.


உன்னிப்பான அவதானத்திற்குரிய மலையின் இந்த முதற்பகுதியைக் கடந்து மேலும் சில பல அடிகள் பயணப்பட மலைத்தொடரின் அடுத்த பகுதி வரவேற்கிறது. மென் சாய்வு கொண்ட இப்பகுதியால் மலையில் மேல் ஏறிச்செல்ல ஒரு அகழி போன்ற சிறிய நீர்த்தடாகம் வரவேற்கிறது. ஒரு மனிதனை மூடக்கூடிய அளவிற்கு நீர் நிறைந்து காணப்படுகின்ற சிறு நீர்த்தடாகத்தில் நீர் வற்றாமல் எப்பொழுதும் நிறைந்திருக்கும் என்கின்கின்றார்கள் கிராம மக்கள். அந்த நீர்த்தடாகத்திற்கு மேலே மலையின் சற்று உயரமான பகுதியில் நாகத்தை பிரதிபலிக்கும் கற்தெய்வ வழிபாடு இடம்பெறுகிறது.


நீர்த்தேக்கத்தில் இருந்து பார்க்கின்ற போது மலைநோக்கிச் செல்லும் இடப்பகுதியின் உயரமான ஓரிடத்தில் மலையோடு தொடர்பற்ற, எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது போன்ற பாரிய கல் ஒன்று சிறு சிறு சதுர வடிவான கற்களை அடித்தளத் தாங்கிகளாக முண்டு கொடுக்கப்பட்டு நிமிர்த்தி வைக்கப்பட்டுள்ளது. புராதன தொழிநுட்பத்தின் இன்னும் ஒரு வடிவத்தை பறைசாற்றுகின்ற இப்பகுதியை கடந்து மலையில் மேல் நோக்கிச் செல்லுகின்ற போது ஒரேசீராக குடையப்பட்ட சிறிய சிறிய குழிகள் தென்படுகின்றன. மருந்துகள் மற்றும் பச்சிலைகளை அரைப்பதற்கான குழிகளாக அவை காணப்பட்டிருக்கலாம் என்கின்ற ஐதீகத்தையும் நம்பிக்கையையும் இக்குழிகளோடு இணைத்துப் பார்க்க இடமிருக்கிறது.


குழிகள் காணப்படுகின்ற அப்பகுதியை கடந்து இன்னும் மேற்சென்று கீழிறங்க மலைத்தொடரில் இயற்கையாகவே அமையப்பெற்ற சிறு குன்றொன்று தென்படுகின்றது. பார்ப்பதற்கு நாகத்தின் தலை போன்று தென்படுகின்ற அந்தக் குன்றில் பாம்பின் முகத்தில் தெரிகின்ற பக்க வளைவுகள் விளிம்புச் சதைகளைப்போன்ற உன்னிப்பான அவதானத்திற்குரிய கற் சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. நாக பாம்புகள் அவ்விடத்தில் உலவுவதாகவும் தாங்கள் பிரசாதமாக படைக்கின்ற பாலை அவை குடிப்பதாகவும் நம்புகின்றார்கள் கிராம மக்களும் பக்தர்களும்.
அந்தப்பகுதியில் இருந்து மலையில் செங்குத்தாக இன்னும் மேல் நோக்கிச்செல்ல மலையின் உச்சிப்பகுதிக்குச் செல்வதற்குரிய சிறு சமவெளிப் பகுதி தென்படுகின்றது. இச் சமவெளிப்பகுதிக்கு செல்வதற்காக அலுமினிய வேலைப்பாடுகளுடை படிகளை ஆலய நிர்வாகத்தின் முயற்சியால் அமைத்திருக்கிறார்கள். ஆனால் முழுமையாக அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதியை வழங்காத நிலையில் அச் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கினையும் தொடர்ந்திருக்கிறது திணைக்களம்.


மலையின் சிறு சமவெளிப்பகுதியிலிருந்து அப்பகுதியின் இரம்மியமான வனப்பையும் சூழலையும் அனுபவிக்க முடிகிறது. பின்னர் அங்கிருந்து மலையின் அடுத்த உச்சிக்கு ஏறிச் செல்வதற்கான எவ்விவிதமான படிகளோ, அமைப்புக்களோ அற்ற நிலையில் இயற்கையாக அமைக்கப்பட்டிருக்கின்ற சிறிய மரக்குற்றியிலான தாங்கிகளையும், பெருங் கொடிகளையும், மரங்களையும் பற்றிக்கொண்டு மேலே ஏற முடிகின்றது.

பெரும் பிராயத்தனத்தின் பின் மேல் நோக்கி ஏறிச்செல்ல மலையின் உச்சியில் கற் பாறைகளை அடுக்கி அவற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்ற புராதன ஆதி இலிங்கேச்சரர் கண்களில் தென்படுகிறார். கூம்பு வடிவிலான பாறைய சதுரக் கற்களின்மேல் அடுக்கி ஒட்டி நிமிர்த்தி வைக்கப்பட்டிருப்பது போன்று தென்படுகின்றது மக்களின் நம்பிக்கைக்குரிய ஆதி இலிங்கேச்சரர் சிவலிங்கம். இந்தச் சிவலிங்கம் இராவணன் காலத்திற்குரியதாக இருக்கலாம் என்கின்ற நம்பிக்கைய வெளிப்படுத்துகின்றனர் கிராம மக்கள்.


இயற்கை மூலிகைகள் நிறைந்த அந்தப் பகுதியிலிருந்து இன்னும் சற்று மேல் நோக்கி ஏறிச்செல்ல அந்த மலையின் சமவெளி தென்படுகின்றது. அங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிட்டை செய்து வழிபடுகிறார்கள் கிராம மக்கள்.
சுமார் முன்நூறு அடிகளுக்கு மேற்பட்ட மலையுச்சியின் சமவெளியில் ஏறிநிற்க காட்டின் காற்று மேனியைத் தழுவ அங்கிருந்து வன்னிப் பிராந்தியத்தின் அழகை கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு பக்கம் வவுனியாவின் காட்சிகளும், மறுபக்கம் மதவாச்சியின் காட்சிகளும், இன்னும் ஒரு பக்கம் பதவியா போன்ற பிரதேசங்களும் தென்படுகின்றன என்பது கிராம மக்களின் கணிப்பு.
புவியின் பெளதீகவியல் ரீதியில் இப்படியான மலை உருவாக்கச் செயற்பாட்டிற்கு பல்வேறு காரணிகள் துணை புரிகின்றன. புவியின் உட்பகுதியில் இயங்குகின்ற மேற்காவுகளை ஓட்டங்களின் காரணமாகவும், புவித்தகடுகளின் ஒருங்குதல் செயற்பாட்டின் காரணமாகவும் மலை உருவாக்கச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் நெடுங்கேணிப் பிரதேசத்தின் பெளதீக இட அமையும் இவ் வெடுக்குநாறி மலையின் புவியியற் காரணிகளும் கற்றுணரப்பட வேண்டிய அதே நேரத்திலே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருக்கின்ற அந்தக் காடுகளும் காட்டு மரங்களும், இந்த மலையும் தேக்கி வைத்திருக்கின்ற தொன்மத்தின் கதைகள் பலவாகும்.


இலங்கையின் குடித்தொகை வரலாற்றில் வன்னிப்பிராந்தியம் காலத்தால் முற்பட்ட வரலாற்றைப் பதிவு செய்கின்றது. இங்கு குளங்களை அடிப்படையாக வைத்து உருவாகிய குடியேற்றத்திட்டங்கள் பெருங்கற்காலத்தின் எச்சங்களையும் அதற்கு முந்திய குறுணிக்கற்கால எச்சங்களையும் பறைசாற்றுபவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

குளங்களை அச்சொட்டாகக் கொண்ட கிராமங்களும் இன்னும் பூனகரி, மன்னாரின் கட்டுக்கரை மற்றும் தேக்கம் பகுதிகள் வவுனியாவின் செட்டிகுளம் மாமடுவ போன்ற பல பிரதேசங்கள் இவற்றின் எச்சங்களாக எஞ்சி நிற்கின்றன. இங்கு கண்டு கொள்ளப்பட்ட தொல்லியல் எச்சங்கள் இதனை உறுதி செய்கின்றன.


அந்த வகையில் புராதன இலங்கையில் நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தை ஆரம்பித்து செயற்படுத்தியவர்கள் நாகர்கள்தான் என்பது சிரான் தெரணியகல உட்பட்ட வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நாகர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் பரவியிருக்கின்றன. கிழக்கிலங்கையின் படுவான்கரையின் வெல்லாவெளியில் அமைந்திருக்கின்ற பிராமி சாசனங்களும் குடைவரை எச்சங்களும் இவற்றை பலப்படுத்துகின்றன.


இதேபோன்ற பிராமி எழுத்துக்களைக் கொண்ட சாசனம் இந்த வெடுக்கு நாறி மலையிலும் பதியப்பட்டுள்ளது. பிராமி எழுத்துக்களை முதன் முதலில் வட இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி பயன்படுத்தினார் என்றும் பிற்காலத்தில் பரப்பப்பட்டு பின்னர் திராவிட மொழிக் குடும்பத்தோடு கலந்த காரணத்தினால் தமிழில் தமிழ் வரி வடிவத்திற்கு ஏற்ப பிராமி எழுத்துக்களை உள்வாங்கி இங்குள்ள மக்கள் பயன் படுத்தினார்கள் என்பதும் மொழியியலாளர்களின் கருத்தாகும்.


ஆக நெடுங்கேணி ஒலுமடுவின் வெடுக்குநாறி மலைப் பிரதேசத்திலுள்ள இந்த பிராமி எழுந்துக்களோடு இணைந்த ஏனைய எச்சங்களும், நாக வழிபாடும், நீர்ப்பாசன அமைப்புக்களும் நாகர்களின் தொன்மத்தின் நீட்சி என்று கருதுவதற்கான வாய்ப்புக்கள் பல உள்ளன. இந்த மலைப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள நாகர் குளம் என்கின்ற குளப்பகுதி இதனை மேலும் வலுப்படுத்துகின்றது. வட கிழக்கில் பூர்வீர்கமாக வாழ்கின்ற தமிழர்கள் நாகர்களின் வழி வந்தவர்கள் என்கின்ற வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இந்த வெடுக்குநாறி மலையின் கதைகள் உலகறியப்பட வேண்டியவை.


ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆலயப் பகுதியில் பக்தர்கள் வழிபாடுகளை நடாத்துவதற்கும் இயல்பான நடமாட்டத்திற்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகளை மேற்க்கொள்வதும் இந்த நிலம் கொண்டிருக்கின்ற கதைகளை மாற்றுவதற்கான முயற்சிகளாகும். இங்கு கோயிலிற்கு சென்று வருவதற்கென அமைக்கப்பட்டிருக்கின்ற ஒரு பகுதிக்கான படிகள் தவிர ஏனைய பகுதிகளுக்கான படிகளை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தடை வித்துள்ளது. அதே நேரத்திலே இந்த ஆலயப்பகுதிக்குச் செல்வதற்கான சுமார் நான்கு கிலோமீற்றர்கள் தூரமுள்ள மண் பாதையில் உரிய முறையில் பாதைகளை அமைப்பதற்கு முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி குறித்தொதுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வன வளபாதுகாப்புத் திணைக்களம் அதற்கான அனுமதியை தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றது. குறித்த அனுமதியைப் பெறுவதற்காக பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அனுமதி இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவற்றிற்கான விளக்கக் கடிதங்கள் முழுமையான சிங்கள மொழியில் ஆலய நிர்வாக சபைக்கு அனுப்பப் பட்டுள்ளது. தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் இந்த நாட்டின் அரச கரும மொழிகள் என்கின்ற நிலையில் மக்களுக்காக, மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலேயே அரச திணைக்களங்கள் சேவையாற்ற வேண்டும்.
இந்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை நடாத்தக்கூடாது என்று தொல்லியல் திணைக்களம் தனிச் சிங்களத்தில் கடிதத்தை அனுப்பி பொலிசார் தடுத்து, பின்னர் நீதி மன்ற அனுமதியில் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.
தொல்லியல் சின்னங்கள் முறையாகப்பராமரிக்கப் பட வேண்டிய அதே நேரத்திலே, வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை, ஆனால் இலங்கையின் புராதன சின்னங்களில் ஒன்றாகிய சிகிரிய சிங்க மலைத்தொடரில் உரிய முறையில் படிகள் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று வரமுடியும் எனில் வெடுக்குநாறி மலையில் படிகள் அமைத்து மக்கள் வழிபாடு செய்வதில் உள்ள தடைகள் என்ன?
பாதுகாக்கப்பட்ட உலக வனங்களில் ஒன்றாகிய சிங்கராஜ வனப்பகுதிக்கு மக்கள் செல்வதற்காக காட்டின் மக்கள் நடமாட்டம் உள்ள முதலாவது வலயப் பகுதிவரை கற்பாதைகள் அமைத்து சென்றுவர முடியும் எனில் அதே போன்று வனத்தினை பாதிக்காத வகையில் கற்பாதைகளை அமைத்து பயணிகள் மற்றும் பக்தர்கள் உரிய முறையில் நடந்து சென்று வழிபாடுகளை நடாந்தி வருகின்ற வகையில் வெடுக்குநாறி மலைக்குச் செல்லும் பாதையில் உரிய கற் பாதைகளை அமைப்பதற்கேனும் வனவளத் திணைக்களம் அனுமதியை வழங்குவதில் உள்ள தடைகள் என்ன?
இந்த ஆலயத்தின் தொன்மத்தை அறிந்த வெளியிடத்து மக்கள் கிராமத்திற்குச் சென்று ஆலயத்தைத் தேடி வழிபடச் செல்கின்றபோது இனம் தெரியாதோரால் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுவதன் பின்னுள்ள கதைகள்தான் என்ன??
இவைதான் கிராம மக்களின் விடையற்ற வினாக்களாக உள்ளன.
படங்களும் பதிவும் – சர்மிலா வினோதினி
Sharmila Vinothini Thirunavukarasu