கடும் மழை!! கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு நாளை நள்ளிரவு வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை அண்மித்து நிலவும் தாழமுக்க நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருநாகல், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய 14 மாவட்டங்களும் ‘அதி அபாயகரமான’ நிலையில் உள்ளதால் வளிமண்டலவியல் திணைக்களம் இந்தச் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும் எனவும், மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 மணிநேரத்தில் களுத்துறை, காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பெருமளவு அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
