புதினங்களின் சங்கமம்

யாழ் பாசையூரைச் சேர்ந்த கெமி ரவுடிக் குழு உறுப்பினர்கள் கைது!!

கெமி குழுவைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புக் காவலர்களால்

கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 வயதான கெனடி என்று அழைக்கப்படுபவரும் 25 பப்பு என்று அழைக்கப்படுபவருமே கைது
செய்யப்பட்டு நீதிவான் மன்றின் உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் நடந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டது கெமி குழு.

யாழ். நகரை அண்டிய பாசையூர் கிராமத்தை மையமாகக் கொண்டு செயற்படும் இந்தக் குழுவின்
அங்கத்தவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு முன்பாக உள்ள வீதியில் தனது
உந்துருளியைப் பெரும் சத்தம் எழும் வகையில் ஆர்முடுக்கியபடி சென்றார் என்று குற்றஞ்சாட்டி
கெமி குழுவினர் இளைஞர் ஒருவரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தமது வீதியில் யாரும் உந்துருளியைப் பெரும் சத்தமாக முறுக்கிச் செல்லக்கூடாது என்பது
கெமி குழுவினரின் கட்டுப்பாடு என்று தெரிவித்து அந்த இளைஞரை எச்சரித்து விடுவித்த
பின்னரும் அவர் மீண்டும் உந்துருளியை முறுக்கிச் சென்றார் என்பதே குற்றச்சாட்டு.

கெமி குழுவினர் தேடிச் சென்றவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது அக்காவின் கணவரைத்
தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

அலவாங்கால் குத்திப் படுகாயப்படுத்தியதால் அவரது இரு கால்களும் செயலிழந்த நிலையில்
இருக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர் மூன்று நாள்களில் வீட்டுக்கு
அனுப்பப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று திகதி வழங்கியிருக்கின்றது போதனா
வைத்தியசாலை.

அவரைக் காயப்படுத்தியது தொடர்பான முறைப்பாடு வைத்தியசாலைக் காவலர்களால் யாழ்ப்பாணம்
சிறுகுற்றப் பிரிவிற்கு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குற்றவியல் குற்றத்தோடு தொடர்புபட்டது என்பதால் பின்னர் அது குற்றப்
பிரிவினருக்கு மாற்றப்பட்டது.

இதனால் சம்பவம் இடம்பெற்று நான்கு நாள்களுக்குப் பின்னரே குற்றவியல் பிரிவினர்
பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்தனர்.
அத்துடன் சாட்சியங்களிடம் இருந்தும் வாக்குமூலம் பெற்றனர்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இரண்டு மணி
நேரத்திற்குள் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருமே கெமி குழுவின் முக்கிய உறுப்பினர்களாவர்.

யாழ். குற்றத் தடுப்புப் பிரிவின் துணை ஆய்வாளர் ஹர்ச சமரகோன் தலைமையிலான அணியினரே
இவர்கள் இருவரையும் பாசையூரில் வைத்துக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 3 பேர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர் என்று
காவலர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு
14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.