மட்டக்களப்பில் சிறை அதிகாரியின் பணத்தையும் களவெடுத்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பிய கில்லாடிக் கைதி!!
தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்தியட்சகரின் 25 ஆயிரம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நேற்று முன் தினம் (09) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த கைதி மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில், சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்று (09) இரவு வழமை போல சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலை அத்தியட்சகரின் பணப் பையில் இருந்த 25 ஆயிரம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு மதில் மேலால் பாய்ந்து குறித்த சிறைக் கைதி தப்பி ஓடியுள்ளான்.
இதனை அடுத்து தப்பி ஓடிய கைதியை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

