வவுனியாவில் கஞ்சா விற்கும் குடும்பத்துக்கு எதிராக நடுஇரவில் களமிறங்கிய மக்கள்!
வவுனியா வேப்பங்குளம் 6ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கணவன், மனைவி உட்பட ஒருவயது அங்கத்தவர்கள் அடங்கிய குடும்பத்தினர் கஞ்சா விற்பனை செய்வதாக வேப்பங்குளம் மக்கள் குற்றம் சுமத்தி நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ந்த போராட்டத்தில் எமது ஊரில் கஞ்சா வேண்டாம், எங்களிடம் கஞ்சாவை விற்காதே, கஞ்சா ஒழிக, சிறுவர்களுங்கு கஞ்சா கொடுக்காதே, என்ற கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன்போது குறித்த கிராம மக்கள் கஞ்சா வியாபாரம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடுகள் தெரிவித்தும் கடமையில் இருந்த பொலிஸார் முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லையென பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த கஞ்சா வியாபாரத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தமையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

