வடமராட்சி நாகர்கோவிலில் இராணுவம் மீது தாக்குதல்!! அதிகாலை பெரும் சுற்றிவளைப்பு!!
இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரைக் கைது செய்யும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்தனர்.
அதன்போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கியுள்ளார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் பகுதி இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

