கிளிநொச்சியில் கசிப்பை ஒழிக்கக் கோரி குழந்தையுடன் வீதியில் உண்ணாவிரதமிருக்கும் இளம் பெண்!!
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பெண் ஒருவர் தன் ஒன்பது குழந்தையுடன் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்பொழுது காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் ,அபலை பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கசிப்பு பாவனையாளர்களால் பெண்களுக்கு அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட குறித்த பெண், இதன் காரணமாக குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக சென்று படிக்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டதாக கூறிய அவர், கசிப்பு பாவனையாளர்கள் எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகம் செய்வதனால் , இப்படி சொல்ல முயாத அளவுக்கு அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுளார்.
இதன் காரணமாக இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும் இனியும் என்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காந்தி கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பில் கிராம அலுவலர், மற்றும் பொலிசாரிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

