புதினங்களின் சங்கமம்

அ, ஆவண்ணா தெரியாத புலிகளின் முன்னாள் உறுப்பனர்களை வைத்தியராக்கிய சிங்கள மந்திரி கஜதீர!! மகிந்த விடும் வாணம் இதோ!!

தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாத விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கச் செய்து அவர்களை பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் நிலைக்கு மாற்றியவர் காலம் சென்ற முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தனது 22 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் சந்திரசிறி கஜதீர பல பொறுப்புக்களை வகித்திருந்தார்.

அவர் பிரதி அமைச்சராக, அமைச்சராக மக்களுக்கு செய்த சேவை பாராட்டத்தக்கது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்துப் பொறுப்புக்களையும் மிகவும் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் மேற்கொண்டிருந்தார்.

சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சராக இருந்து மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க சேவையை யாராலும் மறக்க முடியாது.

சிறையில் இருக்கும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்காக வரலாற்றில் முதற்தடவையாக வட்டரக்க சுனித்த என்ற பெயரில் தேசிய பாடசாலையை ஆரம்பித்தார். அதனை நானே திறந்து வைத்தேன்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த 13,000இற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயமாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதென்பது இலகுவான விடயம் அல்ல. அந்த இளைஞர், யுவதிகளில் பலருக்கு தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் இருந்தது.

அவ்வாறானவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கச் செய்து அவர்களை பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் நிலைக்கு கஜதீர மாற்றியிருந்தார்.

அவ்வாறு கல்வி கற்ற பலர் இன்று வைத்தியராகவும் வேறும் பல நல்ல நிலையிலும் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு வந்திருந்தபோது விடுதலைப் புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளை பார்த்து பாராட்டி கருத்து தெரிவித்ததையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.