பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (30) மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர்
இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாறை குற்றத் தடுப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள், தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்த சி.சி.டிவி கேமராவின் உதிரி பாகங்களையும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது
சம்பவம் இடம்பெற்று வீட்டுக்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் பெரியநீலாவணை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் வெட்டுக்காயங்கள்
சம்பவத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37வயது மதிக்கத்தக்க பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த குடும்பப்பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி காணொளி கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
