புதினங்களின் சங்கமம்

காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு: அதுவும் கட்டாயமல்லவாம்!

காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

“இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது.”

– இவ்வாறு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல்போனோர் குறித்து தேட அரசு தயார். ஆனால், அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி வரும். சிவில் மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம். காணாமல்போனோரில் அதிகமானவர்கள் சிவிலியன்களாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அதுபோன்றே காணாமல்போன இராணுவத்தினர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும்.

காணாமல்போனதாகக் கூறப்படுவோர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் எண்ணுகின்றோம். அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுகின்றோம். ஆனால், அதனை உறுதியாகக் கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு கூறி வைக்கின்றேன்.

சில காணாமல்போனோர் எனக் கூறப்படுவோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே, இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். போர் நிறைவுக்கு வந்து தற்போது 11 வருடங்கள் கடந்துவிட்டன. 7 வருடங்களின் பின்னர் சான்றிதழ் வழங்கலாம்” – என்றார்.