புதினங்களின் சங்கமம்

இலங்கை யுவதி உட்பட்டவர்களை அடிமையாக வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த 7 பேர் மலேசியாவில் கைது!!

மலேசியாவில் சக இலங்கையர் ஒருவரை கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தின் ஜெஞ்சாரோம் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது முதலாளியால் கட்டாயத் தொழிலாளராகச் சுரண்டப்பட்டதாகக் கருதப்படும் இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மலேசியக் குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலனாய்வின் மூலம் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்த 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊடகங்களின் தகவலின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு, பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளான இலங்கைப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் தலைமைப் பணிப்பாளர் டாதுக் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் பணி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பெண்ணை ஏமாற்றி மலேசியாவிற்கு அழைத்துச் சென்று, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகத்தில் பணியமர்த்தியிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பளம் வழங்காமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், போதிய உணவும் வழங்கப்படாமல், அவரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதோடு, உடல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, உரிய பயண ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு அனுமதிகள் இன்றி தங்கியிருந்த மேலும் ஆறு இலங்கையர்களும் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x