தமிழ் மக்கள் தற்கொலை செய்யும் காரணத்தை வெளியிட்ட கருணா!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவினால் போர் நிறைவு செய்யப்பட்ட பின்னர் நாட்டில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அரசாங்கம் வந்த பின்னர் வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்திய போதிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆராயவில்லை.
இராணு புலனாய்வு பிரிவை அழித்து விட்டார். இராணுவத்தினரை கைது செய்தனர். தற்போது என்ன நடந்துள்ளது? தற்போது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு தாக்குதலில் அதிகமாக தமிழ் மக்களே உயிரிழந்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச வருவார் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என கதை ஒன்று பரவுகின்றது.
நானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் மக்கள் மஹிந்த ராஜபக்சவை மாத்திரமே நம்புகின்றனர். அவரால் மாத்திரமே அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும்.
மக்களிடம் தற்போது பணம் இல்லை. அதனாலேயே தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இன்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்று இன்று நிலைமையை பார்க்கவும்.
தற்போதைய சூழலில் மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ச வேண்டும் என்றே கேட்கிறார்கள் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.