தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் ! (Full Video)
தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு, மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது
மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.
யாழில் தீவகம் சாட்டி, கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, அம்பாறையில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
எள்ளாங்குளத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரதான ஈகை சுடாினை மேஜா் சோதியாவின் (சோதியா படையணி) தாயாா் ஏற்றிவைத்தாா்.
அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்து அழித்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்தில், 551ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள முதல் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர்.
கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கொடிகாமம் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 522 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.